Close
ஏப்ரல் 23, 2026 11:34 மணி

சோழவந்தான் திருவேடகம் வைகை ஆற்றுப் பகுதியில் சுகாதாரத் கேடு: ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றுப்பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவேடகம் திரு ஏடகநாதர் ஏலவார் குலழி அம்மன் கோவில் பிரசித்தி பெற்ற சிவன் தலங்களில் முக்கியமான தலமாக கருதப்படுகிறது. இங்கு சித்திரை, புரட்டாசி, ஆடி தை மாதங்களில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நாட்களில், திருவேடகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களும் மற்ற நாட்களில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் தங்களின் முன்னோர்களை வணங்கி இங்குள்ள திரு ஏடகநாதர் ஏலவார்குழலி அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுவது தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

அவ்வாறு வருபவர்கள் ஏடகநாதர் கோவில் அருகில் உள்ள வைகை ஆற்றிற்கு சென்று அங்கு புனித நீராடி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் திருவேடகம் வைகை ஆற்று பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பக்தர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வைகை ஆற்றுப் பகுதிக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகில் உள்ள கால்வாயில் திருவேடகம் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் தேங்கும் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி செல்வதும், அவ்வாறு தேங்கும் குப்பைகள் அங்குள்ள நீர் நிலைகளில் தேங்கி கிடப்பதும் அதன் மூலம் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதுமாக காணப்படுகிறது.

மேலும், அருகில் உள்ள வைகை ஆற்றிலும் குப்பைகளை கொட்டுவதால் வைகை ஆற்றில் வரும் குடிநீரானது பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு காணப்படுகிறது. இதுகுறித்து, திருவேடகம் ஊராட்சி நிர்வாகம் எந்த ஒரு கவலையும் படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்போது திருவேடகத்தில் செயல்பட்டு வரும் நிலையில் அங்குள்ள அதிகாரிகள் அருகில் உள்ள வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள கழிவுநீர் தேங்கிய பகுதிகளை சுத்தம் செய்ய எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு மிகவும் பழமை வாய்ந்ததும் பிரசித்தி பெற்றதுமான ஸ்ரீ ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் கோவில் பகுதியை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top