Close
ஏப்ரல் 23, 2026 6:31 மணி

சிலிண்டர் தட்டுப்பாடால் விறகு அடுப்புக்கு மாறும் ஓட்டல்கள்

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு, தமிழகத்தின் ஹோட்டல் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிவாயு கிடைக்காததால் பெரும்பாலான ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருவதால், உணவுப் பொருட்களின் விலை விரைவில் உயரக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், ஈத் பண்டிகையின் முக்கிய உணவான பிரியாணியின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: பொதுவாகத் திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் மட்டுமே விறகு அடுப்பில் பிரியாணி சமைக்கப்படும். தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்களும் இந்த முறைக்கு மாறியுள்ளன. விறகு அடுப்பில் சமைப்பது சுவையைக் கூட்டினாலும், விறகின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் பிரியாணியின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என கூறினர்

தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் தலைவர்  வெங்கடசுப்பு இது குறித்துக் கூறுகையில்: சென்னையில் மட்டும் ஓட்டல் வணிகம் 30 சதவீதம் சரிந்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளில் 10 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 90 சதவீத ஓட்டல்கள் தற்போது லாபமில்லாமல் இயங்கி வருகின்றன. விறகு விலையும் உயர்ந்துள்ளதால், இனி வரும் நாட்களில் மற்ற உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்று கூறினார்

சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் சில தற்காலிக மாற்றங்களைச் செய்துள்ளன. அதன்படி, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை தோசை சுடுவதை பல ஓட்டல்கள் நிறுத்தியுள்ளன.  சில பிரபல ஹோட்டல் நிறுவனங்கள் இண்டக்சன் அடுப்புகளுக்கு மாறியுள்ளன. சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்தி வழங்கும் முறை அதிகரித்துள்ளது.  அதிக எண்ணெய் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பொரிக்கப்படும்  உணவுகளை விற்பதை ஓட்டல்கள் குறைத்துள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top