இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகளைக் குறைக்கவும், நீதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும் ஒரு பிரத்யேக ‘நீதித்துறை சீர்திருத்த ஆணையத்தை’ உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா வலியுறுத்தியுள்ளார்
பெங்களூருவில் உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் நடத்திய “நீதித்துறை நிர்வாகத்தை மறுசீரமைத்தல்: ஜனநாயக நீதிக்கான நிறுவனங்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான தேசிய மாநாட்டில் அவர் கலந்து கொண்டார்.
வழக்குத் தேக்கத்திலிருந்து விரைவான நீதி வரை என்ற அமர்வில் அவர் பேசியதாவது: இந்தச் சீர்திருத்த ஆணையத்தில் உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்லாமல், வழக்கறிஞர் சங்கப் பிரதிநிதிகள், அட்டர்னி ஜெனரல் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல், அரசின் பிரதிநிதிகள் போன்றவர்களும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்:
வழக்குகள் தாமதமாவதற்குச் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தரப்பினரின் செயல்பாடுகளும் எவ்வாறு காரணமாகின்றன என்பதை பட்டியலிட்ட அவர், ஒவ்வொரு முறை ஆஜராகும்போதும் கிடைக்கும் ஊதியம் மற்றும் கால நீட்டிப்புக்காகப் பல வழக்கறிஞர்கள் வாய்தா வாங்குவதையே விரும்புகிறார்கள். ஒரு வழக்கில் தோல்வியைத் ஒப்புக்கொள்வதை விட, மேல்முறையீடு செய்வதன் மூலம் அதிகாரிகள் தங்கள் மீதான நிர்வாக ரீதியான விமர்சனங்களைத் தவிர்க்க முயல்கின்றனர். குறிப்பாகக் கீழமை நீதிமன்ற நீதிபதிகள், தங்களது தீர்ப்பு மேல்முறையீட்டில் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சத்தில், விரைவான முடிவை எடுப்பதை விட நடைமுறைச் சிக்கல்களில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது குறித்து அரசு பொதுவெளியில் கவலை தெரிவிக்கிறது. ஆனால், மறுபுறம் இடைவிடாத மேல்முறையீடுகள் மூலம் அதே தேக்கத்திற்கு அரசுதான் முக்கியக் காரணமாக இருக்கிறது” என்று நீதிபதி நாகரத்னா சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றங்கள் 24 மணி நேரமும் இயங்க வேண்டும் என்றோ, நீதிபதிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என்றோ கூறுவதை விட, முறையான கட்டமைப்பு மாற்றங்களே அவசியம் என்று அவர் கூறினார்:




