அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.
தூசி மோகன் கடந்த 2016 ஆம் ஆண்டு செய்யாறு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் ஜோதி வென்றார். இதனால் 2026 தேர்தலில் தனக்கு வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் எம்எல்ஏ, தூசி மோகன், தற்போது விஜயின் தவெக-வில் இணைந்தார். அவ்வாறு இணைந்த தூசி கே.மோகனுக்கு செய்யாறு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் விடுத்த அறிக்கையில், அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்கு முறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கிவைக்கப்படுகிறாா்.
அதிமுகவினா் யாரும் அவருடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக்கொள்ளக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




