2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன், நடிகை மனோ சித்ரா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார்.
‘அவள் பெயர் தமிழரசி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, ‘வீரம்’, ‘நீர்ப்பறவை’ போன்ற முக்கியத் திரைப்படங்களில் நடித்த இவர், கையில் தவெக கொடியை ஏந்தியபடி கிரிவலப் பாதையில் வலம் வந்த காட்சி அங்கிருந்த பக்தர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த பிரபல நடிகை மனோசித்ரா, தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் அருள்ஆறுமுகத்தை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நகரின் முக்கிய பகுதியான காமராஜ் சிலை அருகில் திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் அவர் எழுச்சியுடன் சிறப்புரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விஜய் தயாராகி வருவதாகவும், அதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர் விஜய் தேர்தலில் பெரும் வெற்றி பெற வேண்டி நடிகை மனோசித்ரா திருவண்ணாமலையில் கிரிவலம் சென்று பிரார்த்தனை நடத்தினார்.
கிரிவலத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை மனோசித்ரா, கூறுகையில் தளபதி விஜய் நிச்சயம் வெற்றி பெறுவார் எனத் தான் முழுமையாக நம்புவதாகத் தெரிவித்தார். அவர் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காகவே தான் கிரிவலம் சென்றதாகவும், மக்கள் மனதில் விஜய் நீங்கா இடம் பிடித்துள்ளதாகவும் விஜயின் அரசியல் வருகை இளைஞர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை விதைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.




