Close
மே 2, 2026 9:45 மணி

இரண்டாவது நாள் பௌர்ணமி கிரிவலம்: ஊர் திரும்ப பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் பக்தா்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

இதிலும், சித்திரை மாதத்தில் வரும் பெளா்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் சித்தா்கள் கிரிவலம் வருவதாக நம்பப்படுகிறது.

நிகழாண்டுக்கான சித்ரா பவுர்ணமி வருகிற 30-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 9.52 மணிக்கு தொடங்கி மறுநாள் மே 1-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.08 மணிக்கு முடிவடைந்தது.

அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று  அறிவித்திருந்தது.

பேருந்து வசதியின்றி பக்தா்கள் அவதி

கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில்  மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. காலை 10 மணிக்கு மேல் கிரிவலம் முடித்த பக்தர்கள், சென்னை, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகள் இல்லாததால் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கிறோம் எனக் கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குறைவாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பயணிகள் ஜன்னல் வழியாக குதித்து இடம் பிடித்தனர் இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சிறப்பு ரயில்கள் 

இந்நிலையில், திருவண்ணாமலைக்கு நேற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. ஆனாலும், அவை போதுமானதாக இல்லை. அதனால், ரயில்களில் கூட்டம் அலைமோதியது.

ரயில் நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஒரே நேரத்தில் ரயிலில் ஏற முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ரயில் பெட்டிகள் அனைத்தும் நிற்கவும் இடமின்றி கூட்டத்தால் நிரம்பி வழிந்தன. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் ரயிலில் ஏற முடியாமல் திணறினர்.

பெரும்பாலானோர் ரயிலில் ஏற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, இனிவரும் பௌர்ணமி நாட்களில், கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆட்டோ களால் பாதிப்பு

திருவண்ணாமலையில் முக்கிய சாலைகளில் பக்தர்களை தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்ட ஆட்டோக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அண்ணா சிலை, பெரியார் சிலை, திருவள்ளுவர் சிலை அருகே சுமார் 30க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தற்காலிக பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கு அதிக கட்டணம் கேட்டதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.  மாவட்ட நிர்வாகம் ஆட்டோக்களை கட்டுப்படுத்த வேண்டும். அதிகம் தொகை வாங்கும் ஆட்டோ டிரைவர்களின் பர்மீட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top