Close
ஜூன் 13, 2026 12:02 காலை

உசிலம்பட்டி அருகே போதை மாத்திரைகள் பறிமுதல்: மூவர் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்து கைதானவர்கள்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள் புழக்கம் அதிகமாகி வருவதாகவும், இதனால் மாணவர்கள் பெரிதும் பாதிப்படைந்து வருவதாக எழுந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு காவல்துறையினர் உசிலம்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, கொக்குடையான்பட்டியைச் சேர்ந்த திலீப்குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் கீழச்செம்பட்டியைச் சேர்ந்த மூவேந்திரன் என்பவரிடமிருந்து போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

அதன்பேரில், மூவேந்திரனிடம் போதை மாத்திரை வாங்குவது போல வரவைத்த காவல்துறையினர் அவரை உசிலம்பட்டி அருகே தினா விலக்கு பகுதியில் வைத்து கைது செய்தும், சுமார் 5 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான 1800 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவத்தின் போது மூவேந்திரனிடம் போதை மாத்திரை வாங்கிக் கொண்டிருந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த துரைப்பாண்டி என்ற பர்மா என்பவரையும் கைது செய்த தனிப்பிரிவு காவல்துறையினர் மூவரையும் உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த மூவரிடமிருந்தும் 5 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், 20 கிராம் கஞ்சா மற்றும் இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது  வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் கீழச்செம்பட்டியைச் சேர்ந்த மூவேந்திரன் ஆன்லைன் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி திலீப்குமார், துரைப்பாண்டி மூலம் உசிலம்பட்டி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்தும் போதை மாத்திரைகளால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் குறித்தும் உசிலம்பட்டி டிஎஸ்பி ஜெய்கணேஷ் தலைமையிலான போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top