நாமக்கல் அருகே சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்யக்கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி ஆகிய பகுதிகளில், 882 ஏக்கர் பரப்பளவில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்தை அமைக்க கூடாது என, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராம மக்கள், சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாய முன்னேற்ற கழகத்தினர் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சிப்காட் எதிர்ப்பு இயக்கம் சார்பில், திட்டத்தை ரத்து செய்யக்கோரி, கழுத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொள்ளும் நூதன போராட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்தது.
போராட்டத்திற்கு விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். சிப்காட் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் ராம்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட திரளான விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, விவசாய நிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.




