நாமக்கல்லில் 31 ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சமையல் கேஸ் நுகர்வோர் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் கேஸ் நிறுவன மேனேஜர்கள், கேஸ் ஏஜெண்டுகள், விநியோகஸ்தர்கள், நுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம், 31ம் தேதி மாலை 5 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
நிகழ்ச்சிக்கு டிஆர்ஓ சரவணன் தலைமை வகித்து குறைகளை கேட்டறிகிறார். சமையல் கேஸ் விநியோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




