வீடுகள் கணக்கெடுப்பு பணிக்கு கூடுதல் கணக்கெடுப்பாளர்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மாவட்ட சிஇஓவிடம் முறையிட்டனர்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் சங்கத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவனை நேரில் சந்தித்து தெரிவித்ததாவது:
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் ஒரு பகுதியாக தற்போது வீடுகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு கணக்கெடுப்பாளருக்கும், எந்த வீட்டு எண்ணிலிருந்து எந்த வீட்டு எண் வரை கணக்கெடுக்க வேண்டும் என்பதற்கான தெளிவான வீட்டு எண்ணிக்கை மற்றும் பட்டியலை நிர்வாகமே வழங்க வேண்டும்.
தற்போது கணக்கெடுப்பு பகுதிகளை கூகுள் மேப் மூலம் அனுப்பி, கணக்கெடுப்பாளர்களே தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், எங்கிருந்து தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்பதை கண்டறிந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் எந்தெந்த தெருக்கள் மற்றும் பகுதிகளில் உள்ளன என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
சில ஒன்றியங்களில் ஒரு கணக்கெடுப்பாளருக்கு 1,000 வீடுகளுக்கும் அதிகமாக கணக்கெடுக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, 300 வீடுகளுக்கு மேல் கணக்கெடுக்கும் பணி ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், கூடுதலாக கணக்கெடுப்பாளர்களை நியமித்து பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
வீடு கணக்கெடுப்பு பணியின் முக்கியத்துவம் குறித்து அனைத்து பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கணக்கெடுப்பாளர்களுக்கு தேவையான உள்ளூர் தகவல்களை வழங்குவதில் கிராம நிர்வாக அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலர்கள் உதவ வேண்டும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் இராமு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் மலர்க் கண்ணன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில சட்டச் செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நாமக்கல் மாவட்டத் தலைவர் சேகர் உள்ளிட்ட திரளான ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.




