Close
செப்டம்பர் 5, 2026 3:47 மணி

நாமக்கல் கமலாலயக்குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிப்பு

புராண சிறப்பு பெற்ற நாமக்கல் கமலாலயக் குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் நகரில் அடையாளமாக திகழும், ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் அருகில், கமலாலயம் குளம் உள்ளது. புராண சிறப்பு பெற்ற இந்த குளத்தில் ராமாயண காலத்தில் ஆஞ்சநேயர் குளித்ததாக ஐதீகம் உள்ளது. அவரது பாதங்கள் பட்ட இடம் இன்னும் இந்த குளத்தின் அடியில் உள்ளது.

மேலும் கடந்த 1980ம் ஆண்டு வரை நாமக்கல் நகர மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இந்த குளம் விளங்கியது. மலைமீது பெய்யும் மழைநீர் வழிந்தோடி இந்த குளத்தில் சேரும், மேலும் நல்லிபாளையம் அருகில் இருந்த வரும் பொய்யேரி கால்வாயில் வரும் தண்ணீரும் இந்த குளத்தில் சேரும் வகையில் அமைந்துள்ளது.

கமலாலயக் குளக்குரையில் குழந்தைகள் பூங்கா மற்றும் படகு சவாரி வசதி உள்ளது. மாலை நேரங்களில் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இங்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 5 ஆண்டுகளாக கமலாலயக் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருந்தது. சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக கமலாலளயக்குளத்தில் நரசிம்மர், ரங்கநாதர் தெப்பத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. குளத்தில் தனியார் மூலம் ஒப்பந்தம் பெற்று மீன் வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக நாமக்கல் பகுதியில் பருவமழை பொய்த்துவிட்டது. இதனால் கமலாயக்குளத்திற்கு நீர் பிடிப்பு பகுதியில் இருந்து தண்ணீர் வரவில்லை. தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை கடும் வெயில் அடித்ததால் குளத்தின் நீர் மட்டம் கடகடவென குறைந்து வருகிறது.

தற்போது குளத்தில் பாதி அளவுக்கும் குறைவாக தண்ணீர் உள்ளது. மேலும் பொய்யேரிக்கரை கால்வாய் மாசுபட்டுள்ளதால், அது வழியாக வந்த சாக்கடை நீர் கமலாலய குளத்தில் தேங்கியுள்து. இதனால் நீர் மட்டம் குறைந்ததும், குளத்து நீர் மாசுபட்டுள்ளது.

மாசடைந்த நீரில் உயிர்வாழ முடியாமல் நூற்றுக்கணக்கான மீன்கள் கமலாலயக் குளத்தில் செத்து மிதக்கின்றன. இதை சுத்தம் செய்யாமல் உள்ளதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பூங்காவிற்கு வருபவர்கள் மற்றும் பார்க் ரோட்டில் செல்லும் பொதுமக்கள் மூக்கைப்பிடித்துக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கமலாலயக் குளத்தை தூய்மைப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top