இந்தியாவில் தற்போது பரவலாகப் பேசப்படும் வேலையிழப்புகள், இனி அலுவலகங்களை விடத் தெருக்களில்தான் அதிகமாக இருக்கும் அபாயம் எழுந்துள்ளது.
காரணம், இந்தியாவின் 12 லட்சக் வலுவான ‘கிக் பணியாளர்கள்’ எதிர்கொள்ளவிருக்கும் ஆட்டோமேஷன் மற்றும் ஏஐ அச்சுறுத்தல் ஆகும்.
குர்கான் மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் டிரோன்கள் மூலம் விநியோகங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், அமேசான் போன்ற நிறுவனங்கள் தங்கள் குடோன்களில் ஏஐ மூலம் இயக்கப்படும் ஆட்டோமேஷன் முறைகளை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும், இந்தியாவின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஓர் ஆசுவாசமாக இருந்த கிக் துறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன.
பல்வேறு மாநிலங்களில் டெலிவரி பார்ட்னராகப் பணிபுரியும் இளைஞர்கள் வாரத்தில் ஆறு நாட்களும் குறைந்தது 12 மணிநேரம் வேலை செய்கிறார்கள். சில சமயங்களில் அது 15 மணிநேரம் வரையும் நீளுகிறது. அவர்கள் நாளொன்றுக்கு 100 முதல் 180 கி.மீ வரை தனது இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்கள். ஒரு கி.மீ தூரத்திற்குள் டெலிவரி செய்தால் ரூ. 15 அடிப்படை ஊதியமும், கூடுதல் கி.மீ-க்கு ரூ. 10-14 வரையும் அவர்களுக்கு கிடைக்கிறது.
ஆனால், அவர்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால், அவர்கள் டெலிவரி செய்யும் அதே மளிகை மற்றும் மருந்துகளை, டிரோன்கள் மூலம் ஒரு கி.மீ-க்கு வெறும் ரூ. 4 செலவில், மிக வேகமாக விநியோகிக்கத் தொடங்கியுள்ளன என்பதாகும்.
ஏஐ தொழில்நுட்பம், ஆட்டோமேஷன் மூலம் குறைந்த திறன் கொண்ட கிக் பணியாளர்களின் வேலைகள் பறிபோகும் அபாயம் உள்ளது.
இந்தியாவின் கிக் பணியாளர்கள் இரண்டு பெரிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர்:
நிதி ஆயோக்கின் அறிக்கையின்படி, இந்தியாவின் கிக் பணியாளர்களின் எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 1 கோடியில் இருந்து 2 கோடியாக இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஒவ்வொரு பணியாளரும் சுலபமாக நீக்கப்படக்கூடியவர்களாக மாறுவார்கள்.
அமெரிக்காவில் அமேசான் குடோன்களில் பணியாளர்களைக் குறைக்கத் ஆட்டோமேஷன் முறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த மாற்றம் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. விநியோகப் பணியாளர்கள் முதல் ‘டார்க் ஸ்டோர்’ ஊழியர்கள் வரை, லட்சக்கணக்கான குறைந்த திறன் கொண்ட பணிகள் ஆபத்தில் உள்ளன.
கிக் பொருளாதாரத்தின் தேவை அதிகரித்த கொரோனா காலத்தில், ஊழியர்களைத் தக்கவைக்க ஊதியம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அடிப்படை ஊதியம் ரூ. 20-லிருந்து ரூ. 15 ஆகவும், ஒரு கி.மீக்கான கட்டணம் ரூ. 15-20-லிருந்து ரூ. 10-14 ஆகவும் குறைந்துள்ளது. சில டெலிவரி ஆப்-கள் இப்போது ஒரு கி.மீ-க்கு ரூ. 6-7 மட்டுமே செலுத்துகின்றன.
பெரும்பாலான கிக் பணியாளர்கள் முழுநேர வேலை செய்தாலும், அவர்கள் சாதாரண ஊழியர்களுக்குக் கிடைக்கும் இன்சூரன்ஸ், குறைந்தபட்ச ஊதியம், விடுமுறைகள் போன்ற எந்தப் பலன்களையும் பெறுவதில்லை. அவர்களை ஊழியர்களாக நிறுவனங்கள் அங்கீகரிப்பதில்லை.
ஒரு கிக் ஊழியரை எந்தவித இழப்பீடும் இன்றி எந்த நேரத்திலும் வேலையிலிருந்து நீக்க நிறுவனத்தால் முடியும். இவர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் முழுமையாக இல்லாததால், அவர்கள் எளிதில் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள்.
இந்தியாவில் ஏஐ-ன் தாக்கம் எப்போது வரும்?
இந்தியாவின் அடுக்கு-I நகரங்களில் எதிர்காலத்தின் அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.
ட்ரோன் விநியோகம்: குர்கான் மற்றும் பெங்களூருவில் உள்ள சில குடியிருப்பு வளாகங்களில் 5 முதல் 8 கிலோ எடையுள்ள மளிகை மற்றும் மருந்துகள் டிரோன்கள் மூலம் சில நிமிடங்களில் விநியோகிக்கப்படுகின்றன. இரு சக்கர வாகனத்தில் டெலிவரி செய்யும் நேரத்தை விட இது பாதியாகும்.
அதிகரிக்கும் முதலீடு: இந்தியாவின் ட்ரோன் சந்தை 2030 ஆம் ஆண்டுக்குள் பத்தாயிரம் கோடியாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிரோன்களுக்கான ஜிஎஸ்டி வரியை 5% ஆக அரசு குறைத்திருப்பது, சரக்கு விநியோகத்தில் ட்ரோன்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்கும்.
குடோன் ஆட்டோமேஷன்: அமெரிக்காவில் கிடங்கு ஊழியர்களுக்குப் பதிலாகப் பொருட்களை வகைப்படுத்தவும், தூக்கவும், பேக் செய்யவும் ரோபோட்டிக் கைகள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவில் மனித உழைப்பு கிடைப்பதால் இந்தியாவில் இது தாமதமாகலாம் என்றாலும், வேகத்தைக் கூட்டவும் செலவுகளைக் குறைக்கவும் நிறுவனங்கள் இதையே தேர்ந்தெடுக்கும்.
பொருளாதார வல்லுநர்கள் கருத்துப்படி, ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் உடனடியாக கிக் துறையை முழுமையாக நீக்காது. ஆனால் காலப்போக்கில் இது குறைந்த திறன் கொண்ட உழைப்புக்கான தேவையை நிச்சயம் குறைக்கும். எதிர்காலத்தில் பிழைக்க விரும்புபவர்கள், தங்களைத் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிக் பொருளாதாரம் ஒரு வாழ்வாதாரமாக இருந்தாலும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இவர்களின் பாதையை எந்த நேரத்திலும் அடைக்கக்கூடும். இந்தியாவில் மலிவான மனித உழைப்பு ஒரு அனுகூலமாக இருந்தாலும், நீண்ட காலத்திற்கு மனித உழைப்பை நம்பியிருப்பதைக் குறைப்பதே நிறுவனங்களின் இலக்காக இருக்கும்.
இன்றைய தேதியில் சாலைகளில் கடினமாக உழைக்கும் லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு, நாளைய அவர்களின் பயணப் பாதை திடீரென மறைந்துபோகலாம் என்பதே நிதர்சனம்.




