கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கக்கோரி வருகிற ஜன. 10ம் தேதி, மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாமக்கல் வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு அரசு 2025 -2026 ஆண்டுக்கான பட்ஜெட், மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகள் நலன் கருதி, கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 கொள்முதல் விலையாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் இது வரை அதற்கான அரசு உத்தரவு வெளியிடவில்லை.
தற்போது இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பருவம் தொடங்கியுள்ள நிலையில், கரும்பை வெட்டி சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் மூலம் பழைய கொள்முதல் விலையான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3,290.50 மட்டும் தான் மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
திமுக அரசு கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் கரும்பு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் வழங்கவில்லை. இதனால் தமிழகத்தில் கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
கரும்புக்கு உடனடியாக டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் அரசு உத்தரவு வழங்கக்கோரியும், இதுவரை வழங்காத திமுக அரசை கண்டித்தும் வருகின்ற ஜன. 10ம் தேதி, காலை 11 மணிக்கு நாமக்கல் மாவட்டம், மோகனூர் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் சங்கம் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
இந்த ஆர்பாட்டத்தில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு சப்பளை செய்த அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.




