Close
மார்ச் 19, 2026 1:14 மணி

கீழ்பென்னாத்தூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய 53 ஐம்பொன் சிலைகள்

திருவண்ணாமலை – கீழ்பென்னாத்தூரில் 53 ஐம்பொன் சிலைகள் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியது. உரிய ஆவணம் இன்றி காரில் கடத்தி வரப்பட்ட நிலையில் ஐம்பொன் சிலைகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது உரிய ஆவணமின்றி டாடா ஏசி வாகனத்தில் எடுத்து வந்திருந்த 5 பேரிடமிருந்து மொத்தம் ரூ4 லட்சத்து 13 ஆயிரத்து 630ம், மேலும் ரூ1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள வெண்கல சிலைகள் 53, ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட ரூ 80 ஆயிரம் மதிப்புள்ள 40 மூட்டை பிரியாணி அரிசி ஆகியவற்றினை உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்றபோது பறக்கும் படை அதிகாரிகளால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்தனர்.

இவற்றை கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட உதவி ஆணையருமான(கலால்) க.செந்தில்குமாரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் வட்டாட்சியருமான வே.இராஜேந்திரன் மற்றும் அலுவலர்களும் உடனிருந்தனர்.

ஆடு வியாபாரி, நாடக கலைஞரிடம் ரூ.4.58 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தொகுதியிலும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பறக்கும்படை அலுவலர் விஜய் தலைமையில் ஏட்டு ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று அதிகாலை வந்தவாசி- சேத்துப்பட்டு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, வல்லம் கிராமத்தில் இருந்து போளூர் நோக்கி பைக்கில் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டனர்.

இதில் அவரிடம் இருந்து ரூ.73 ஆயிரத்து 30 இருந்தது. விசாரணையில், வல்லம் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார், ஆடு வியாபாரி என்பதும், போளூரில் நடந்த சந்தையில் ஆடுகள் வாங்குவதற்காக பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது. ஆனால் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வந்தவாசி தாசில்தார் ஜெயபாலிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் தமிழரசன் தலைமையிலான படையினர் ஆரணி நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆரணியில் இருந்து இருந்து வந்தவாசி நோக்கி வந்த பைக்கை சோதனை செய்தனர். அப்போது ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நாடக கலைஞரான ஆனந்தன் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.3.85 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதனை பறிமுதல் செய்து வந்தவாசி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயவேலிடம் ஒப்படைத்தனர். பின்னர் விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் உள்ள தனது மகளுக்காக வந்தவாசி பகுதியில் வீட்டுமனை வாங்கி உள்ளதாகவும், அதனை பத்திரப்பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு காசோலை எடுப்பதற்காக வங்கிக்கு செல்லும் போது பணம் பறிமுதல் செய்யப்பட்டது தெரியவந்தது.

உரிய ஆவணம் செலுத்தி பணத்தை பெற்றுக் கொள்ளும்படி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனந்தனுக்கு ஆலோசனை வழங்கினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top