Close
ஏப்ரல் 24, 2026 9:08 மணி

நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை குழுக்கள் வாபஸ்

நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த பறக்கும்படை,  கண்காணிப்புக்குழு மற்றும் வீடியோ கண்கணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் மூலம், தமிழக சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையொட்டி மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

3 ஷிப்டு முறையில் இரவு பகல் 24 மணி நேரமும் இந்த குழுவினர் வாகனங்களில் ரோந்து சென்று, உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொண்டு சென்றவர்களிடம், அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் முறையான ஆவணங்களை சமர்ப்பித்தவர்களின் ரொக்கம் மற்றும் பொருட்கள் திருப்பி வழங்கப்பட்டன.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நாமக்கல் மாவட்டத்தில் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதையொட்டி தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில் இன்று 24ம் தேதி முதல் பறக்கும் படை, நிலையாண கண்காணிப்பு குழு மற்றும் வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்த குழுக்களில் பணியாற்றிய அலுவலர்கள் மற்றும் போலீசார் வழக்கமாக பணிக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top