அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, நாமக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமை வகித்தார். தலைமையிடத்து செயலாளர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட மகளிரணி செயலாளர்கள் வாசுகி, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன், சட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில், கடந்த ஆட்சியில் வெளியிட்டுள்ள அரசு உத்தவரால், தமிழக உறுதி அளிக்கப்ட்ட ஓய்வூதிய திட்டமானது, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையை கொண்டு வழங்குவதாக உள்ளது. 2025-26 கல்வி ஆண்டில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதிய பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். அவற்றை கருத்தில் கொண்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து பிரிவினரும், 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என அரசு உத்தரவை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், அவர்கள் பணியாற்றியுள்ள பணிக்காலத்திற்கு ஏற்ப, வெய்ட்டேஜ் மதிப்பெண் இரண்டு ஆண்டு பணி காலத்திற்கு, ஒரு மதிப்பெண் என்ற அடிப்படையில் வழங்க வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையில், அனைத்து நிலையிலும் ஒளிவு மறைவற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், அலுவலக பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுகளில் நடைமுறைக்குவரும் புதிய பாடத்திட்டத்தில், 8 முதல், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கும், 10 மதிப்பெண் அகமதிப்பெண் வழங்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி நிறுவனங்களில், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை, 10 சதவீதமாக உயர்த்த வேண்டும்.
ஆர்டிஐ சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை மாற்றி அரசு பள்ளிகளில் அந்த மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க வேண்டும் என்பவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, பணி நிறைவு பெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.




