நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில், 2,800 ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கூறினார்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரியில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு-2027 விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மதுபாலன் தலைமை வகித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும். கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களாக ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட 2,800 பணியாளர்கள் இப்பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு, தமிழகத்தில், வரும், ஆக., 1 முதல், 30 வரை, வீடுகள் தோறும் சென்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடக்க உள்ளது.
முதற்கட்டமாக, கடந்த 17 முதல் வரும் 31 வரை சுய கணக்கெடுப்பு பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீட்டின் வசதிகள் குறித்த அடிப்படைத் தகவல்களை, தாங்களாகவே மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யலாம்.
வலுவான கொள்கை உருவாக்கவும், நீண்டகால செயல்திட்டங்களை வகுக்கவும், துல்லியமான மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியமாகும். அதற்கான விழிப்புணர்வு பணியினை மாணவ மாணவியரும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு தனி வட்டாட்சியர் செல்வராஜ், கல்லூரி முதல்வர் மாதவி, ரெட்கிராஸ் செயலாளர் ராஜேஸ்கண்ணன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.




