நாமக்கல்-சேலம் ரோடு சந்திப்பில் ஏஎன்பிஆர் எனும் நவீன போக்குவரத்து கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரீஷ் அசோக் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது:
நாமக்கல் மற்றும் மாவட்டம் முழுவதும் வாகன விதிமுறை மீறல்கள், குற்றச்செயல்களை தடுக்கவும் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மாவட்டத்தின் எல்லைகளில் ஏஎன்பிஆர் எனும் ஆட்டோமேட்டிக் கேமராக்களை பொருத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி நாமக்கல் மாவட்ட எல்லையான மல்லூர், வளையப்பட்டி, பரமத்தி வேலூர், பள்ளிபாளையம் மற்றும் நாமக்கல் மாநகர நுழைவுப் பகுதியான முதலைப்பட்டி ஆகிய 5 இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது.
இவை வாகனங்களில் வருபவர்கள் ஹெல்மட் அணியாதது, கார்களில் சீட் பெல்ட் அணிந்து செல்லாதது உள்ளிட்ட போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக, தானாகவே அந்தந்த வாகனங்களின் எண்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அதற்குரிய அபராதத்தை வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்களுக்கு அனுப்பி வைக்கும். அதேவேளையில் குற்றச்செயல்களை தடுக்கவும் இவை உதவும்.
இதற்கான கட்டுப்பாட்டு அறை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 5 இடங்களிலும், அடுத்த கட்டமாக 15 இடங்களிலும் ஏஎன்பிஆர் கேமராக்கள் செயல்பட்டுக்கு வரும் என அவர் தெரிவித்தார்.




