Close
ஜூலை 25, 2026 6:08 மணி

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் கழிவுநீர் தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சாக்கடை கழிவுநீர் முறையான வடிகால் இன்றி தெருக்களிலும், சாலைகளிலும் ஆறாக ஓடுவதால் பெரும் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் பாதியில் நின்ற பணிகள்

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த கால்வாய்கள், கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாகக் கூறி ஜே.சி.பி எந்திரம் மூலம் தோண்டப்பட்டன.

ஆனால், ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஊராட்சி நிர்வாகம், அதன்பின்னர் அந்த வடிகால் கால்வாய்களை மறுசீரமைப்பு செய்யாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றித் தேங்கி, குடியிருப்புப் பகுதிகள் மற்றும் பிரதான சாலைகளில் வழிந்தோடுகிறது.

நோய் பரவும் அபாயம்

இப்பகுதியில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளி மற்றும் அரசு நடுநிலைப் பள்ளிகளில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தினமும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் இக்கழிவுநீரைக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது. தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட கொடூரத் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை!

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சில தினங்களுக்கு முன்பு, முள்ளிப்பள்ளம் ஊராட்சிப் பகுதிக்கு நன்றி தெரிவிப்பதற்காக வருகை தந்த சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா அவர்களிடம் பொதுமக்கள் இது குறித்து நேரில் முறையிட்டனர். உடனடியாக ஊராட்சியின் செயலாளரை அழைத்த எம்.எல்.ஏ, கழிவுநீர் தேங்காதவாறு முதற்கட்டமாகத் தற்காலிக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு உத்தரவிட்டுச் சென்றார்.

ஆனால், சட்டமன்ற உறுப்பினர் உத்தரவிட்டுச் சென்ற பிறகும் கூட, ஊராட்சி செயலாளர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் எந்தவொரு முன்னெடுப்பும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏதேனும் பெரிய அளவில் தொற்றுநோய் பரவி அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன், மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்களைப் புதியதாகச் சீரமைத்துத் தர வேண்டும் என முள்ளிப்பள்ளம் கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top