கொல்லிமலை அறப்பளீஸ்வரர் கோயிலில் ஆடி 18 பெருக்கு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கொல்லிமலை வளப்பூர்நாடு பெரிய கோயிலூரில் பிரசித்தி பெற்ற அறம் வளர்த்த நாயகி உடனுறை அறப்பளீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் ஆண்டுதோறும் ஆடி 18 பெருக்கு விழா பாரம்பரிய முறைப்படி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இதில் கொல்லிமலை மலைவாழ் மக்கள் மட்டுமின்றி சேலம், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் கலந்து கொள்வர். இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று கோயிலில் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிசேகம், நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
முன்னதாக உற்சவ மூர்த்தி உட்பிரகாரம் வலம் வருவதல், மாலை திருக்கல்யாண உற்சவம், சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஆக. 4ம் தேதி வரை நடைபெற உள்ளது என இந்து சமய அறநிலையத் துறையினர் தெரிவித்தனர்.




