மதுரை திருப்பரங்குன்றம் மூலக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் வேங்கை இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் சார்பில், வள்ளலார் அறிவொளி கலை பண்பாட்டு அறக்கட்டளை, மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் மற்றும் வீட் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து தமிழகம் முழுவதிலும் 20 மாவட்டங்களில் இருந்து சிலம்ப மாணவர்களை ஒன்றிணைத்து அவர்கள் ஒன்று சேர திருக்குறள் வாசித்தபடி சிலம்பம் சுற்றும் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர்.
இந்த உலக சாதனை முயற்சியில், 950 மாணவர்கள் ஒரே நேரத்தில் திருக்குறளை ஒப்புவித்துக் கொண்டே 1 மணி நேரம் 12 நிமிடங்கள் இடைவிடாமல் திருக்குறளை வாசித்தபடி சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் வழங்கப்பட்டன.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்புக் கலையான சிலம்பத்தையும், உலகப் பொதுமறையான திருக்குறளையும் உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கிலும் மாணவர்களுக்கு ஒழுக்கத்தை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.




