பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் திருக்கோவிலாகும். அருணாசலேஸ்வரா் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனே மலையாக காட்சி அளிக்கிறார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவில், கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அ அருணாசலேஸ்வரா் கோவில், அஷ்டலிங்க கோவில்கள், திருநேர் அருணாசலேஸ்வரா் கோவில் மற்றும் துர்க்கை அம்மன் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உண்டியல் வைக்கப்பட்டு பக்தர்களிடம் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் பணம், வெள்ளி, தங்கம் போன்றவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
மாதம்தோறும் அருணாசலேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப் பாதையில் அஷ்டலிங்க சந்நிதிகளில் உள்ள உண்டியல்களில் சேகரமாகும் காணிக்கை பணம் எண்ணப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த மாத பௌர்ணமிக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியா்கள், தன்னாா்வலா்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில் அருணாசலேஸ்வரர் கோவில், மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் வைக்கப்பட்டு இருந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
அப்போது, கோயில் உண்டியலில் காணிக்கையாக ரூ.6 கோடியே 29 லட்சத்து 99 ஆயிரத்து 271 பக்தர்கள் செலுத்தியிருந்தனர். 197 கிராம் தங்கம், 1.640 கிலோ வெள்ளி ஆகியவற்றையும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
பின்னர், உண்டியல் காணிக்கை எண்ணிக்கை முடிந்ததும், அந்த தொகை உடனடியாக அருணாசலேஸ்வரா் கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்பட்டது.
கடந்த 3 ஆண்டாக ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் சுமார் ரூ. 3 கோடிக்கும் அதிகமாக வருவது குறிப்பிடத்தக்கது.




