நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளிலும், தேர்தல் நாள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில், வரும், ஏப். 23ல், சட்டசபை தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் அனைவரும், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக, இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்கா மூர்த்தி வழிகாட்டுதலின்படி, 18 வயது நிரம்பிய அனைவரும், வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், மாவட்டம் முழுவதும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ண்ட் மூலமாகவும், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர் என 8,662 பேர் தேர்தல் விழிப்புணர்வு சின்னத்தின் மிகப்பெரிய மனித வடிவமான மாற்றுத்திறனாளிகள் மொபைல் செயலி வடிவத்தில் நின்று உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தலைமை வகித்து, பேருந்துகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்திலும், தேர்தல் நாள் குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சரவணன், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் செங்கோட்டுவேலவன், கிளை மேலாளர்கள் துரைசாமி, கவுதமன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.



