Close
ஏப்ரல் 24, 2026 2:28 காலை

தேர்தல் ஜூரம் காரணமாக இபிஎஸ் ஸ்டாலினை தரக்குறைவாக பேசுகிறார்: நாமக்கல்லில் கனிமொழி, எம்.பி., பேச்சு

திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரசாரம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, எம்.பி., நாமக்கல் மாவட்டத்தில் புதுச்சத்திரம், நாமக்கல், குமாரபாளையம் ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

நாமக்கல் பார்க் ரோட்டில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், அவர் நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணியை ஆதரித்து பிரச்சார வேனில் நின்றவாறு பேசியதாவது:

நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு, திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள முதல் பெண் வேட்பாளர் ராணி. அவருக்கு அனைவரும் ஓட்டளித்து, இத்தொகுதியின் முதல் பெண் எம்எல்ஏவை தேர்வு செய்யுங்கள். கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு திமுக தந்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழகத்தில், தற்போது சுமார் 1.30 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ. 1,000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. மீண்டும் திராவிட ஆட்சி தொடரும். அப்போது மகளிர் உரிமை தொகை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ. 1,200ல் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ. 1,500ல் இருந்து 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.

தற்போது செல்லும் இடத்தில் எல்லாம் பெண்கள் இரட்டை விரலைக் காட்டி ரூ. 2 ஆயிரம் உரிமைத்தொகையை ஆர்வமுடன் வரவேற்கின்றனர்.
கடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க வுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று கூறிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி, இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்து உள்ளார். பல மாநிலங்களில் பா.ஜ கூட கூட்டணி வைத்தவர்கள் நிலை என்ன ஆனது என்று உங்களுக்கு தெரியும்.

எடப்பாடி பழனிசாமி பார்த்து பத்திரமாக இருந்து கொள்ளுங்கள். தேர்தலுக்கு பிறகு ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆகி விடுங்கள். அதிமுக தற்போது அமித்ஷா திமுக ஆகிவிட்டது. தமிழ்நாட்டுக்கும், தன்னை வளர்த்த அதிமுகவுக்கும் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, தோல்வி பயத்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. அதனால் ஏற்கனவே முதல்வராக இருந்த அவர், மிகவும் கீழ்த்தரமாக தற்போதைய தமிழக முதல்வரை பேசி வருகிறார். இந்த தேர்தலில் அவருக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.

தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் திமுக. தொகுதி மறுசீரமைப்பு கொண்டு வந்து தமிழகத்திற்கு உண்டான மக்களவை தொகுதியை குறைக்க முயற்சி நடக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றால் அதிமுக ஆட்சியில் செல்போன் தருவோம் என கூறியது என்ன ஆனது? தேர்தலில் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.8 ஆயிரம் கூப்பன் தருகிறோம். உங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருளை வாங்கிக் கொள்ளலாம்.

விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தாமல், நவீன மின் மோட்டார்கள் வழங்கப்படும். நாமக்கல் மக்களுக்கு தேவையான திட்டங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஜவுளி குழுமம் அமைக்கப்படும். திருமண முத்தாறில் பாலம் அமைக்கப்படும், மோகனூர் காவிரி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும்.

நாமக்கல் பகுதியில் கோழிப் பண்ணை தொழிலை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கோழி வளர்ப்பு மையம் அமைக்கப்படும். இந்த தேர்தல் தமிழகத்தின் கீழடிக்கும், வட இந்தியாவில் ஆஎர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூருக்கும் இடையிலான தேர்தல். நிச்சயம் திமுக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top