50 ஆண்டுகால அரசியல் பயணத்தை ஒரு சில மாதங்களில் மாற்றிவிட முடியாது என்பதற்குச் சாட்சியாக அமைந்தது இன்று சத்தியமங்கலத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரசார நிகழ்வு.
தமிழக வெற்றிக் கழகத்தின் கோபிசெட்டிபாளையம் தொகுதி வேட்பாளராகக் களம் காணும் அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இன்று பவானிசாகர் தனித் தொகுதியின் த.வெ.க வேட்பாளர் தமிழ்ச்செல்விக்கு ஆதரவாகச் சத்தியமங்கலம் பகுதியில் தீவிர வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைத் தன் பாணியில் வெளுத்து வாங்கிய செங்கோட்டையன், பிரசாரத்தின் உச்சகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு, “இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என முழங்கினார். இதைக் கேட்டதும் மேடையிலிருந்த த.வெ.க நிர்வாகிகளும், கூடியிருந்த தொண்டர்களும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
தவறுதலாகப் பேசியதை அடுத்த சில விநாடிகளிலேயே உணர்ந்த செங்கோட்டையன், சற்றும் பதற்றமடையாமல் தனது அரசியல் அனுபவத்தை வைத்து அதைச் சாமர்த்தியமாகச் சமாளித்தார்.
மைக் பிடித்த அவர் சிரித்துக்கொண்டே, “பல வருஷமா இரட்டை இலை சின்னத்துலேயே வாக்கு கேட்டு எனக்குப் பழகிப்போச்சு. அது பழைய நினைவிலேயே வந்துடுச்சு” என்று கூறினார்
மேலும் அவர் கூறுகையில், கோபிசெட்டிபாளையத்தில் நான் வாக்குச் சேகரிக்கச் சென்றபோது, ஒரு மூதாட்டி என்னிடம் வந்து ‘உங்களுக்காக எப்போதும் போல இரட்டை இலைக்கே வாக்களிப்போம்’ என்றார். அவரிடம் நான் இல்லை தாயே, தற்போது நான் ‘விசில்’ சின்னத்தில் போட்டியிடுகிறேன்; எனக்கு விசில் சின்னத்தில்தான் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னேன். அவரும் ‘கண்டிப்பா தம்பி, உங்களுக்குத்தான் என் வாக்கு’ என்றார்,” எனக் கூறி நிலையைச் சமாளித்தார்.




