இந்தியா விடுதலை பெற்ற பிறகு, கடந்த 1951-52 முதல் 2026 வரையிலான 75 ஆண்டு காலத்திற்குள் 19 நாடாளுமன்றப் பொதுத் தேர்தல்களையும், அதற்கு இணையான மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் சந்தித்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று நாம் பெருமிதம் கொண்டாலும், ஒரு கசப்பான உண்மை நம் கண்முன்னே நிற்கிறது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற எந்தவொரு பொதுத் தேர்தலிலும், மக்களிடம் 50 சதவீதத்திற்கு மேல் (உண்மையான பெரும்பான்மை) வாக்குகள் பெற்ற எந்தவொரு கட்சியும் ஆட்சிக்கு வந்ததே இல்லை.
அனைவரும் சமம், அனைவரது வாக்குகளும் சமம் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் உண்மையான மக்களாட்சியில், பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர்களே ஆளத் தகுதி உடையவர்கள். ஆனால், தற்போதைய இந்தியத் தேர்தல் நடைமுறை இந்த உண்மையான மக்கள் பிரதிநிதித்துவத்தை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளது.
எஃப்பிடிபி என்னும் பழங்காலத் தேர்தல் முறை
இந்தியாவில் தற்போதைய தேர்தல் நடைமுறை என்பது, பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கக் கூட்டு முறையில் உருவான ‘எஃப்பிடிபி’ எனப்படும் ‘முதலில் எல்லைக் கோட்டைத் தொடுபவரே வெற்றியாளர்’ என்ற தேர்தல் முறையாகும்.
இதனை எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பந்தயத்தில் ஓடும் குதிரைகளில் எந்தக் குதிரை முதலில் எல்லைக் கம்பத்தைத் தாண்டுகிறதோ, அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதற்கு அடுத்து வரும் குதிரை வெறும் ‘நூலளவு இடைவெளியில்’ பின் தங்கியிருந்தாலும் அதற்குப் பலனில்லை.
இதேபோல், ஒரு தொகுதியில் பதிவாகும் வாக்குகளில் 30 முதல் 40 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் ஒரு வேட்பாளர், மற்றவர்களை விட ஒரு வாக்கு கூடுதலாகப் பெற்றிருந்தாலும் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார். மீதமுள்ள 60 முதல் 70 சதவீத மக்களின் வாக்குகள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, மதிப்பிழந்து போகின்றன. இது எப்படி உண்மையான மக்களாட்சியாக இருக்க முடியும்?
நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாற்றுப் பின்னணி: ஓர் அலசல்
கடந்த 75 ஆண்டுகால நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை ஆராய்ந்தால், இந்தத் தேர்தல் முறையின் பலவீனம் துல்லியமாக விளங்கும்:
- 1951-52 (முதல் பொதுத் தேர்தல்): காகித வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற இத்தேர்தலில், நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சியமைத்தது. ஆனால், அக்கட்சி பெற்ற வாக்கு சதவீதம் வெறும் 45% மட்டுமே.
- 1957 (இரண்டாவது பொதுத் தேர்தல்): காங்கிரஸ் கட்சி 494 இடங்களில் 371 இடங்களை வென்றது. எனினும், பெற்ற வாக்கு சதவீதம் 47.8% மட்டுமே ஆகும்.
- 1962 (மூன்றாவது பொதுத் தேர்தல்): மீண்டும் நேருவின் தலைமையில் காங்கிரஸ் 361 இடங்களை வென்ற போதிலும், அதற்கு நாடு தழுவிய அளவில் கிடைத்த வாக்குகள் வெறும் 44.7% தான்.
- 1967 மற்றும் 1971 தேர்தல்கள்: இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் முறையே 40.8% மற்றும் 43.7% வாக்குகளை மட்டுமே பெற்று, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களுடன் ஆட்சி அமைத்தது.
- 1975 அவசரநிலைக்குப் பின் (1977 தேர்தல்): அவசரநிலை முடிந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, ஜனதா கட்சி ஆட்சியமைத்த போதிலும், அதுவும் கூட 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை.
இந்த வரலாற்றுத் தரவுகள் உணர்த்துவது என்னவெனில், இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பேற்ற எந்தவொரு ஒற்றைக் கட்சியும் மொத்த வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோரின் (50%+) ஆதரவைப் பெற்றதே இல்லை என்பதாகும். மக்கள் தொகையில் பெரும்பான்மையினரால் நிராகரிக்கப்பட்ட அல்லது விரும்பப்படாத கட்சிகளே, நாடாளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று நம்மை ஆண்டு வந்துள்ளன.
மாநில சட்டமன்றத் தேர்தல்களின் நிலை
நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமன்றி, மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. அண்மையில் நடைபெற்ற 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் முந்தைய பல தேர்தல்களை உற்றுநோக்கினால், பெரும்பான்மையான மக்கள் வாக்குகளைப் பெறாத கட்சிகளே சட்டமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியமைத்துள்ளன என்பதை அறியலாம்.
திரைமறைவுக் காய்நகர்த்தல்கள், வாக்குகள் சிதறடிப்பு, கூட்டணிக் கணக்குகள் ஆகியவற்றின் மூலம் ஒரு சில சதவீத வாக்குகள் முன்னிலையில் ஒட்டுமொத்த அதிகாரமும் ஒரு கட்சியின் கைகளுக்குச் சென்றுவிடுகிறது.
தேவைப்படும் அவசர மாற்றங்கள் (சீர்திருத்தங்கள்)
இந்திய ஜனநாயகத்தின் தூண்களை வலுப்படுத்தவும், மக்களின் ஒவ்வொரு வாக்குக்கும் உண்மையான மதிப்பை அளிக்கவும் தேர்தல் நடைமுறைகளில் கீழ்க்காணும் சீர்திருத்தங்கள் அவசியமாகின்றன:
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை
ஐரோப்பாவின் பல நாடுகளில் பின்பற்றப்படும் இம்முறையில், ஒரு கட்சி ஒட்டுமொத்தமாகப் பெறும் வாக்கு சதவீதத்திற்கு ஏற்பவே நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ அதற்கு இடங்கள் ஒதுக்கப்படும். உதாரணத்திற்கு, ஒரு கட்சி 40% வாக்குகளைப் பெற்றால், அதற்கு 40% இடங்களே கிடைக்கும். இதனால் மக்களின் வாக்குகள் வீணாகாது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு :
ஒரு தொகுதியில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பெறவில்லை எனில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்களுக்கு இடையே மீண்டும் ஒருமுறை தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர் நிச்சயம் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்களின் ஆதரவைப் பெற்றவராக இருப்பார்.
கூட்டணி மற்றும் வேட்பாளர் தேர்வு முறைகளில் கட்டுப்பாடு:
வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக உருவாக்கப்படும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளையும், பணபலத்தால் வாக்குகளைப் பிரிக்கும் சுயேச்சை மற்றும் போலி வேட்பாளர்களின் எண்ணிக்கையையும் முறைப்படுத்த வேண்டும்.
அனுபவங்கள் சிறந்த பாடங்களைக் கற்பிக்கும் என்பார்கள். ஆனால், கடந்த 75 ஆண்டுகளாகப் பெரும்பான்மை மக்களின் ஆதரவு இல்லாத ஆட்சிகளைப் பார்த்த பின்னரும், நாம் ‘பழமையான எஃப்பிடிபி முறையையே இன்னும் பிடித்துக் கொண்டிருப்பது ஜனநாயத்திற்கு உகந்ததல்ல.
வாக்களிக்கும் ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் நாட்டின் ஆட்சியைத் தீர்மானிப்பதில் சமமான பங்கைப் பெற வேண்டும். அப்போதுதான் அது ‘மக்களுக்கான, மக்களால் நடத்தப்படும், மக்களின் ஆட்சியாக’ மாறும். இந்தியத் தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றமும் உடனடியாகத் தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கித் தீவிரமாகச் சிந்தித்து, காலத்திற்கு ஏற்ற மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.

