Close
ஏப்ரல் 23, 2026 8:17 மணி

நாமக்கல்லில் முப்பெரும் தேரோட்டத் திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நாமக்கல் நரசிம்ம சாமி பங்குனி தேரோட்ட விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர். (உள்படம்) ஸ்ரீதேவி, பூதேவி சமேத நரசிம்மர்.

நாமக்கல் நகரில் நடைபெற்ற முப்பெரும் பங்குனி தேரோட்டத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

ஒரே கல்லினால் உருவான நாமக்கல் மலையின் மேற்குப்புறத்தில், நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மசாமி திருக்கோயில் உள்ளது. இங்கு லட்சுமி நரசிம்மர், மூலவர் மலையைக்குடைந்து குடவறைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கோயிலிக்கு நேர் எதிர்புரத்தில் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் இரவு பகல் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மலையின் கிழக்குப்பகுதியில் அரங்கிநாயகித்தாயார் உடனுறை அரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு கார்க்கோடகன் என்ற பாம்பின்மீது ரங்கநாதர் அனந்த சயன நிலையில் மலையைக்குடைந்து குடவறைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில், இந்த மூன்று தெய்வங்களுக்கும் ஒரே நாளில் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையிலும், மாலையிலும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

கடந்த மார்ச் 31ம் தேதி மாலை, குளக்கரை மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமிக்கு மொய் சமர்ப்பித்து வழிபட்டனர். ஏப். 1ம் தேதி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து வேடுபரி உற்சவம் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கோட்டையில் உள்ள நரசிம்ம சுவாமி தேரோட்டம் இன்று 2ம் தேதி, காலை 9 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக நாமகிரித்தாயார் மற்றும் நரசிம்மர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேர் சக்கரங்களுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

கோயில் உதவி கமிஷனர் இளையராஜா. அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி, அறங்காவலர்கள் சீனிவாசன், டாக்டர் மல்லிகா, செல்வசீராளன், ரமேஷ்பாபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இன்று மாலை 4 மணிக்கு, நாமக்கல் மெயின் ரோட்டில் உள்ள ஸ்ரீ அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் தேரோட்டம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி தேரோட்டம் நடைபெற்றது.

முப்பெரும் தேரோட்டத்தை முன்னிட்டு, நாமக்கல் நகருக்குள் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. திருவிழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பில் நீர்மோர் மற்றும் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top