Close
ஏப்ரல் 23, 2026 8:17 மணி

தமிழ் புத்தாண்டையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தமிழ் புத்தாண்டையொட்டி, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது.

உலகப்பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, தமிழ் புத்தாண்டையொட்டிசிறப்பு அபிஷேகம் மற்றும் தங்கக் கவசம் அலங்காரம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் நகரின் மையத்தில், நரசிம்ம சுவாமி மற்றும் நாமகிரித் தாயார் கோயில் எதிரில் ஒரே கல்லினால் 18அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு வணங்கிய நிலையில் சாந்த சொரூபியாக ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு இரவு பகல் 24 மணி நேரமும் அருள் பாலித்து வருகிறார்.

இன்று பராபவ தமிழ் புத்தாண்டு, சித்திரை முதல் தேதியையொட்டி, ஆஞ்சநேயருக்கு அதிகாலை 8 மணிக்கு 1,008 வடை மாலை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9 மணிக்கு, நல்லெண்ணெய், மஞ்சள், சந்தனம், சீயக்காய், திருமஞ்சள், 1,008 லிட்டர் பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கனகாபிஷேகத்துடன் அபிஷேகம் நிறைவு பெற்றது.

பின்னர், சுவாமிக்கு தங்கக்கவசம் அலங்காரம் நடைபெற்றது. பகல் 12 மணியளவில் திரை விலக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட கியூவில் நின்று சுவாமியை வழிபட்டனர். நாமக்கல் கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி கமிஷனர் இளையராஜா, அறங்காவலர் குழு தலைவர் தென்பாண்டியன் நல்லுசாமி மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top