Close
ஏப்ரல் 23, 2026 9:54 மணி

வாக்குப்பதிவு நாளன்று தனியார் துறை தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை: நாமக்கல் ஆட்சியர் தகவல்

நாமக்கல்லில் உள்ள தனியார் ஸ்பிண்ணிங் மில்லில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏப். 23 ஓட்டுப்பதிவு நாளை நினைவு கூறும் வகையில், கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமையில் 300 தொழிலாளர்கள் 23 என்ற வடிவத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டனர்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் சேலம் ரோட்டில் உள்ள, தனியார் ஸ்பின்னிங் மில்லில், தொழிலாளர் நலத்துறை சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான துர்காமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டுதல், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தல், நோட்டீஸ்கள் வினியோகம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 250 தொழிற்சாலைகளை சேர்ந்த 16,000 தொழிலாளர்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மில்லில் பணியாற்றும் 300 தொழிலாளர்கள் தேர்தல் ஆணையத்தின் மொபைல் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும், தேர்தல் நாளன்று தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக, சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உங்களது வாக்கை நேர்மையாகவும், நியாயமான முறையில் செலுத்த வேண்டும். வாக்கை எதற்காகவும் விட்டு கொடுக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது. நல்ல நோக்கத்துடன் உங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். அனைவரும் அவசியம் ஓட்டுபோடுவோம் என கூறினார்.

தொடர்ந்து, தொழிலாளர்கள் தங்களது மொபைல் போனில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தியவாறு, தேர்தல் நாளான ஏப். ‘23’ என்ற வடிவத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., சரவணன், தொழிலாளர் உதவி கமிஷனர் ஆணையர் இந்தியா, கேகேபி டெக்ஸ்டைல்ஸ் நிர்வாக இயக்குனர் நல்லதம்பி, செயல் இயக்குனர் சதீஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top