Close
ஜூன் 2, 2026 11:21 மணி

நாமக்கல்லில் புதிய வீட்டுக்கு வரி விதிக்க லஞ்சம் கேட்ட மாநகராட்சி வருவாய் உதவியாளர் உள்பட 2 பேர் கைது

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் உதயகுமார் மற்றும் ஒப்பந்த தூய்மைப்பணியாளர் கலா ஆகியோர்.

புதிய வீட்டுக்கு வரி விதிக்க ரூ. 15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, நாமக்கல் மாநகராட்சி வருவாய் உதவியாளர் மற்றும் தூய்மைப்பணியாளர் ஆகிய 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட சிலுவம்பட்டியை சேர்ந்தவர் பூபதி (44). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர், சொந்தமாக வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டிற்கு வரி விதிக்க, நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது, மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் வருவாய் உதவியாளர் உதயகுமார், ரூ. 25,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தொடர்ந்து பேரம் பேசி, 15,000 ரூபாய் கேட்டுள்ளார். அப்போது, முதல் தவணையாக ரூ. 7,000 பூபதி தந்துள்ளார். மீதி பணம் பின்னர் தருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாத பூபதி, இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து, போலீசாரின் ஆலோசனைபடி, ரசாயன பவுடர் தடவிய ரூ. 8,000 பணத்தை இன்று மாநகராட்சி அலுவலகத்தில், உதயகுமாரிடம், பூபதி வழங்கினார்.

அந்த லஞ்ச பணத்தை, அங்கிருந்த என்.கொசவம்பட்டியை சேர்ந்த தற்காலிக தூய்மைப்பணியாளர் கலாவிடம் கொடுத்துள்ளார் ப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார், உதயகுமார் மற்றும் கலாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து லஞ்சம் பெற்ற இருவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில், லஞ்ச வாங்கிய வழக்கில், வருவாய் உதவியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top