திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாதுமலை ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு ஜெயின் ஜோசப் பள்ளி வளாகத்தில் 26-வது ஜவ்வாதுமலை கோடை விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமை தாங்கினார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திட்ட இயக்குநர் காஞ்சனா வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு ஜவ்வாதுமலை கோடை விழாவில் சுமார் 27,532 பயனாளிகளுக்கு ரூ 111கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது, “பெண்கள் கல்வியே குடும்ப வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாகும். பெண்கள் படித்தால்தான் சமுதாயமும், மாநிலமும் வளர்ச்சி அடையும்” என்றார்.
மேலும் , திருவண்ணாமலை , திருப்பத்தூர் , கரூர் உள்ளிட்ட சில மாவட்டங்கள் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதற்கு குழந்தை திருமணமும், பெண்கள் கல்வியில் பின்தங்கியிருப்பதும் முக்கிய காரணங்களாக உள்ளதாக குறிப்பிட்டார்.
18 வயதிற்கு முன் பெண்களுக்கு திருமணம் செய்வது சட்டவிரோதம் என்பதால், குழந்தை திருமணத்தை முற்றிலும் ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஆண் குழந்தைகளை போலவே பெண் குழந்தைகளையும் உயர்கல்வி படிக்கச் செய்ய வேண்டும் என்றும், பெண்கள் குடும்பத்தையும் நாட்டையும் வழிநடத்தும் திறன் கொண்டவர்கள் என்றும் கூறினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் ஆகியோரை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவர், பெண் குழந்தைகளை சாதனையாளர்களாக உருவாக்க பெற்றோர்கள் உறுதி கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் ஜமுனாமுத்தூர் உள்ளிட்ட மலைப் பகுதிகளுக்கு மாதந்தோறும் 2 நாட்கள் நேரில் சென்று கல்வி, வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பொதுமக்களின்தேவைகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் கிராமம்தோறும் நடைபயணம் மேற்கொண்டு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அரசு திட்டங்கள் அனைத்தும் ஏழை மக்களை முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்த திட்டத்திலும் ஊழலுக்கு இடமளிக்காமல், தமிழ்நாட்டை லஞ்சமற்ற மாநிலமாக மாற்ற அரசு உறுதியாக செயல்படும் என்றார்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சென்னை போன்ற முன்னேற்ற மாவட்டமாக மாற்றுவதற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் தனக்கு பொறுப்பு வழங்கியுள்ளதாகவும், அந்த நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சுதாகர், உதவி இயக்குநர் (தணிக்கை) அமிர்தமன்னன், செயற்பொறியாளர் இளங்கோ, சுற்றுலாத்துறை அலுவலர் கார்த்திக், கோட்டப் பொறியாளர் ஆதவன், உதவி கோட்டப் பொறியாளர்கள் அருள்நாதன், அற்புதகுமார், வட்டாரவளர்ச்சி அலுவலர்கள், துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் சார்ந்த அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.




