Close
ஆகஸ்ட் 2, 2026 9:09 மணி

குற்றாலத்தை உலகத் தரத்திலான சுற்றுலா மையமாக மாற்ற நடவடிக்கை: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார்

சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் பேட்டி

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ் குமார் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து, குற்றாலத்தை உலகத் தரத்திலான சுற்றுலா மையமாக உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

கீழப்பாவூர் பெரிய ஏரியில் படகு தளம், சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டிடங்கள் மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார். மேலும், குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி மற்றும் சிற்றருவி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் சுமார் ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் நவீன கழிப்பறைகள், உணவகங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

அருவிப் பகுதிகளுக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு, சுத்தமான கழிப்பறைகள், உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் கழிப்பிட வசதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

குற்றாலத்தை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், முன்பு செயல்பட்ட சுற்றுலா தகவல் மையத்தை மீண்டும் தொடங்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்திற்கென தனி சுற்றுலாத் துறை அலுவலகம் அமைப்பது தொடர்பாக வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய “பிளாஸ்டிக் இல்லாத குற்றாலம்”, “குப்பையில்லாத குற்றாலம்” என்ற இலக்குடன் விழிப்புணர்வு இயக்கங்கள் முன்னெடுக்கப்படும் என்றும், தன்னார்வ அமைப்புகள், மாணவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்புடன் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறினார்.

அருவிப் பகுதிகளில் வணிக ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்தி இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் வகையில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மருத்துவ அவசர சேவைக்கான ஆம்புலன்ஸ் வசதிகள், தொல்லியல் துறை சார்ந்த அருங்காட்சியக மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் அமைச்சர் ராஜேஷ் தெரிவித்தார்.

இத்திட்டங்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்புடன் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top