நாமக்கல், சின்னமுதலைபட்டி, அம்மச்சி அம்மனுக்கு நடைபெற்ற பால் குட ஊர்வலத்தில், திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன முதலைப்பட்டியில் பிரசித்தி பெற்ற அம்மச்சி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பெருவிழா சிறப்பாக நடைபெறும்.
இந்த ஆண்டு 3வது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, பால்குட ஊர்வலம் மற்றும் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு சின்ன முதலைப்பட்டி காவடி பழனியாண்டவர் கோயிலில் இருந்து பால்குட ஊர்வலம் புறப்பட்டது. ஏராளமான பெண்கள் புணித நீராடி, மஞ்சள் ஆடை உடுத்தி, பால் குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
தெற்கு வீதி, முன்சீப் வீதி, செல்வகணபதி கோயில், பகவதியம்மன் கோயில், செல்லக்குமாரன் கோயில், குட்டைத்தெரு, மெயின் ரோடு வழியாக பால்குட ஊர்வலம் அம்மச்சி அம்மன் கோயிலை வந்தடைந்தது. தொடர்ந்து கோயில் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு பாலபிசேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இரவு சாமிக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் மாவிளக்கு தட்டுகளுடன் ஊர்வலமாக வந்து சுவாமிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.




