Close
ஏப்ரல் 24, 2026 3:56 காலை

நாமக்கல் சட்டசபை தொகுதி முதல் வேட்பாளர்: சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் சட்டசபை தொகுதிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக, அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி தலைவர் காந்தியாவதி ரமேஷ் சைக்கிளில் ஊர்வலமாக வந்தார்.

நாமக்கல் சட்டசபைத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் துவங்கியது. முதல் வேட்பாளராக காந்தியவாதி ரமேஷ் நூதன முறையில் சைக்கிளில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 23 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவர் காந்தியவாதி ரமேஷ் என்பவர் முதலாவதாக தனது வேட்பு மனுவை நாமக்கல் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலர் ஆர்டிஓ சாந்தியிடம் தாக்கல் செய்தார்.

முன்னதாக நாமக்கல் மலைக்கோட்டை அருகில் இருந்து காந்தி வேடத்தில், பொம்மை துப்பாக்கி மற்றும் தலையில் சிசிடிவி கேமராவுடன் தனது ஆதரவாளர்களுடன் சைக்கிளில் ஊர்வலமாக வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி துப்பாக்கி மற்றும் சிசிடிவி கேமராவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான டெபாசிட் தொகை ரூ.10 ஆயிரத்தை சில்லரையாகவும்,ரொக்கமாகவும் கொண்டு வந்ததால் அதிகாரிகள் அதனை சிரமப்பட்டு என்னி கணக்கிட்டனர்.

இதுகுறித்து ரமேஷ் கூறியதாவது: நான் இதுவரை 13 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளேன். தற்போது 14வது முறையாக, நாமக்கல் சட்டசபை தொகுதியில், தவாக கூட்டணியில் போட்டியிடுகிறேன்.

அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை தடுக்க அனைத்து அதிகாரிகளுக்கும் அடையாள அட்டையில் கேமரா மற்றும் ஜிபிஎஸ் பொருத்த வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்காக அனைத்து பெண்களுக்கும் லைசென்சுடன் துப்பாக்கி வழங்க வேண்டும். இதை வலியுறுத்திதான் இவ்வாறு வந்தேன் என கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top