நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 30 மாணவியருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதில் 25 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவியர் 30 பேருக்கு இன்று மதியம் திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட ஆசிரியர்கள் அம்மாணவியர்களை உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதில் 5 மாணவியர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று பள்ளி திரும்பினர். 25 மாணவியர் உள்நோயாளியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மாணவியர் அனைவரும் நாமக்கல் மோகனூர் ரோடு முருகன் கோயில் பின்புறம் உள்ள பள்ளி மாணவியர் சமூகநீதி விடுதியில் தங்கியுள்ள மாணவியர் எனத் தெரியவந்தது. விடுதியில் 58 மாணவியர் தங்கியுள்ளனர். இன்று மதியம் முட்டைகோஸ் சாம்பாருடன் கூடிய உணவு வழங்கப்பட்டுள்ளது.
இதை சாப்பிட்ட மாணவியரில் 30 பேருக்கு மட்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே வாந்தி மயக்கம் ஏற்பட்ட மாணவியர் அனைவரும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவியர். அம்மாணவியருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவியருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.




