பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பத்திரங்களை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: பத்திரப்பதிவு அலுவலங்களில், ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக ஆன்லைன் மூலம் ஆவணப்பதிவு முறையினை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும், இரவு பகல் 24 மணி நேரமும், ஆன்லைன் மூலம் பதிவுத்துறை வெப்சைட்டில் தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.
ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் எலக்ட்ரானிக் கையொப்பத்துடன், ஆவணம் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் மற்றும் இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை சம்மந்தப்பட்டவர்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
வருகை இல்லா ஆவணப்பதிவு (எனிவேர் ரெஜிஸ்ட்ரேசன்) நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டு, அதற்கான கீழ்க்கண்ட நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.
சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்: முதல் விற்பனை மனை (ஃபர்ஸ்ட் சேல் ஆப் பிளாட்), முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள். வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள்.
பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வக்கீல்கள், பதிவுத்துறை வெப்சைட்டில், தங்களுக்கான லாக் இன் ஐடியை தாங்களே உருவாக்கி, ஆவணங்களை (ரசீது) ஆன்லைன் மூலம் அப்லோடு செய்து சமர்ப்பிக்கலாம்.
ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை அப்லோடு செய்யவேண்டும்.
ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
தேவையான தொழில் நுட்ப வசதிகள்: இண்டர்நெட் இணைப்பு, யுஐடிஏஐ அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் எடுக்கும் கருவி. வெப்கேமரா ஆகியவை இருந்தால் போதும்.
சந்தேகங்களுக்கு டிசிஎஸ் நிறுவன அலுவலர்களை ஹார்டுவேர் சம்மந்தமாக 7397574067, 9940446694, சாஃப்ட்வேர் சம்மந்தமாக 6369798973, 8525805957 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




