திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிகள் மாநில விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, நாமக்கல்மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
உயரிய தொழில் நுட்பத்தை கடைப்பிடித்து, திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
இப்போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு, சிறப்பு பரிசு மற்றும் பதக்கம் வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிக்கு, குறைந்தபட்சம், 2 ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ வைத்து, திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
மேலும், பயிர் விளைச்சல் போட்டியில் குறைந்தபட்சம், 2 ஏக்கர் பரப்பு பயிர், நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்படும். இப்போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பதிவு கட்டணமாக ரூ. 150 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண் இயக்குனர் தலைமையிலான, மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. மேலும், இது தொடர்பான விபரத்தை பெற, தங்கள் பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குனரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




