நாமக்கல் மாவட்டத்தில், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 98 சதவீதம் பேர் தபால் வாக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து, நாமக்கல் மாவட்டட ஆட்சியர் துர்கா மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் என, 6 சட்டசபை தொகுதிகளில், 13 லட்சத்து, 23,753 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கான, பூத் சிலிப், 99 சதவீதம் அவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் மூலம் நேரில் சென்று வழங்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம், 1,781 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய முயற்சியாக இந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்குச்சாவடி மையங்களில், மொபைல்போன் சேகரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரே வளாகத்தில், 5 அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தால், வாக்காளர்கள் மையத்தை எளிதாக அறிந்து கொள்வதற்காக, இந்த ஆண்டு முதல்முறையாக, வாக்குச்சாவடியை தனித்தனியே பிரித்து காண்பிக்கும் வகையில், வண்ணக் கோடுகள் வரையப்பட்டுள்ளன.
மேலும், 9,000 ஆசிரியர்கள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், 9,000 பேரில், 98 சதவீதம் பேர், தங்கள் வீடுகளில் இருந்து வாக்குப்பததிவு செலுத்தி உள்ளனர்.
இந்த தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவை எட்ட வேண்டும். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அளித்துள்ள தபால் வாக்குகளை பொருத்தவரை, 8,900 வாக்குகள் பதிவாகியுள்ளன. 9,000க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலர்கள் பதிவு செய்துள்ளனர். 4,200 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, அந்தந்த தொகுதியில் மையத்தில் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில், சி.ஆர்.பி.எப். மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த, 3,150 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ‘சக்சம்’ செயலி மூலம், 2,753 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து, சக்கர நாற்காலி, ஓட்டுச்சாவடி மையத்திற்கு சென்று வர தொகுதிக்கு தலா 3 வாகன வசதி, தன்னார்வலர்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றத்தரப்படும்.
மாவட்டத்தில், 6 சட்டசபை தொகுதிகளுக்கும், 3,902 எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,133 கட்டுப்பாட்டு கருவிகள், 2,312 விவிபேட்’ கருவிகள் மற்றும் தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.




