சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிஃபா, உலகக் கோப்பை தொடரின் வணிக உரிமைகளில் 20 சதவீத பங்குகளைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்க முயன்ற திட்டம் உலகெங்கிலும் உள்ள கால்பந்து அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் அதிகாரப்பூர்வமாகக் கைவிடப்பட்டுள்ளது.
பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ கொண்டு வந்த இந்த சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு ஐரோப்பிய கால்பந்து அமைப்பான , ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் வட அமெரிக்க கால்பந்து அமைப்பு ஆகியவை கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜியான்னி இன்ஃபான்டினோ தலைமையிலான பிஃபா நிர்வாகம், உலகக் கோப்பை தொடரின் வணிக செயல்பாடுகளை நிர்வகிக்க புதிய துணை நிறுவனத்தை உருவாக்கத் திட்டமிட்டது.
சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்நிறுவனத்தில் 20% பங்குகளை விற்கும் மூலம் $4.2 பில்லியன் டாலர் நிதி திரட்ட பிஃபா முயன்றது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடும்பத்தினருடன் தொடர்புடைய ‘த்ரைவ் கேபிட்டல்’ போன்ற தனியார் முதலீட்டு நிறுவனங்கள் இதில் முன்னணி முதலீட்டாளர்களாகச் செயல்பட இருந்தன.
இதன் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து பிஃபாவின் 211 உறுப்பு நாடுகளுக்குத் தலா 20 மில்லியன் டாலர் வழங்கி உதவ முடியும் என இன்ஃபான்டினோ உறுப்பு நாடுகளுக்கு ஆசை வார்த்தை காட்டினார்
இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, உலக கால்பந்து சமூகத்திலிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின:
ஐரோப்பாவின் 55 கால்பந்து சங்கங்களும் இணைந்து பிஃபா தொடர்களைப் புறக்கணிக்கப் போவதாக எச்சரித்தன. “சில விஷயங்கள் விற்பனைக்கு உரியவை அல்ல. உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டுக்கே உரித்தானது. அது ஒருபோதும் விற்பனைக்கு வராது” என்று ஐரோப்பிய கால்பந்து அமைப்பு திட்டவட்டமாக அறிவித்தது.
ஆசிய மற்றும் வட அமெரிக்க அமைப்புகளும் இந்தத் திட்டம் குறித்து தங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும், இது விளையாட்டு அமைப்பின் வெளிப்படைத்தன்மையைக் கெடுக்கும் என்றும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
இன்ஃபான்டினோவுக்கு எதிரான போராட்டம் வெளி அமைப்புகளோடு நிற்காமல், பிஃபா தலைமையகத்திற்குள்ளேயே எதிரொலித்தது:
பிஃபாவின் மூத்த ஆலோசகரான கார்லோஸ் கோர்டீரோ , “உலகக் கோப்பையின் பங்குகளை விற்பதை என்னால் வேடிக்கை பார்க்க முடியாது” எனக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிஃபாவின் முதன்மை செயல்பாட்டு அதிகாரி கெவின் லமூர், ஊழியர்களிடம் வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் “ஒரே ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம்” என்று இன்ஃபான்டினோவை பகிரங்கமாக விமர்சித்தார்.
“நாங்கள் கேட்டறிந்த கருத்துக்களின் அடிப்படையில், இத்திட்டம் சர்வதேச கால்பந்து சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தியுள்ளது தெளிவாகிறது. எனவே, இத்திட்டத்தை மேற்கொண்டு முன்னோக்கி கொண்டு செல்லப்போவதில்லை என பிஃபா தலைவர் ஜியான்னி இன்ஃபான்டினோ கூறியுள்ளார்
இத்திட்டத்தை வாபஸ் பெற்ற போதிலும், ஜியான்னி இன்ஃபான்டினோவின் தலைவர் பதவிக்கு ஆபத்து நீங்கவில்லை. ஐரோப்பிய கால்பந்து அமைப்பு அமைப்பு இன்ஃபான்டினோவின் தலைமை மீது தங்களுக்கு இனி “நம்பிக்கை இல்லை” என்றும், இதன் பின்னணியில் இருந்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டு மொராக்கோவில் நடைபெறவுள்ள பிஃபா தலைவர் தேர்தலுக்கு நவம்பர் 18-க்குள் வேட்புமனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிலையில், இந்தத் தோல்வி இன்ஃபான்டினோவின் 10 ஆண்டுகால பிஃபா ஆட்சியில் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.




