Close
ஏப்ரல் 23, 2026 9:54 மணி

குருத்தோலை ஞாயிறு பவனி: நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு, ஏராளமான கிறிஸ்துவர்கள், கையில் குருத்தோலையுடன் ஊர்வலமாக சென்றனர்.

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறு, குருத்தோலை ஞாயிறாக கொண்டாடுப்படுகிறது. அதையடுத்து, நாமக்கல் மாவட்டம் முழுவதும் கிறிஸ்துவ மக்கள் ஊர்வலமாக சென்று தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய ஞாயிறு, தனது பாடுகளை மக்களுக்கு உணர்த்த கழுதை மேல் அமர்ந்து ராஜா போன்று ஜெருசலேம் நகர் நோக்கி சென்றதாக நம்பப்படுகிறது.

குருத்தோலையை ஏந்தியபடி ‘ஓசன்னா’ பாடலை பாடியபடி அவர் பவனியாக சென்றதை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகின்றனர். இதனை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவ மக்கள், குருத்தோலை ஞாயிறு என்று, குருத்தோலையை ஏந்தி பவனியாக சென்று சிறப்பு திருப்பலியில் பங்கேற்கின்றனர்.

இதையொட்டி, உலகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. தமிழகத்திலும், அதிகாலை முதலே பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. நாமக்கல் கிறிஸ்து அரசர் ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு சிறப்பு ஜெபம் நடந்தது. பங்கு தந்தை மாணிக்கம் தலைமையில் நடந்த வழிபாட்டில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

மோகனூர் அடுத்த ஆர்.சி.பேட்டப்பாளையம் புனித செசீலி ஆலயத்தில் பங்கு தந்தை ஜான் தலைமையில், குருத்தோலை ஏந்தியபடி, ஓசன்னா பாடலை பாடி, கிறிஸ்துவர்கள் ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து, சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

கடந்த, பிப்., 18ல், சாம்பல் புதனுடன் 40 நாட்கள் தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவங்கினர். அடுத்த வாரம் ஈஸ்டர் பண்டிகையுடன் இந்த தவக்காலம் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில், குருத்தோலை ஞாயிறு பவனியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு, சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top