நாமக்கல் உழவர் சந்தையில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கலந்துகொண்டு, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ்களை வழங்கினார்.
சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில், நாமக்கல் உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சட்டசபை தேர்தலில், 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட வாக்கு லோகோவை அவர் பார்வையிட்டு செல்ஃபி போட்டோ எடுத்துக்கொண்டார். பின்னர் செல்ஃபி ஸ்டாண்டை அவர் திறந்து வைத்தார்.
உழவர் சந்தைக்கு வந்திருந்த உழவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடிய ஆட்சியர், விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி அனைவரும் 100 சதவீதம் தேர்தலில் ஓட்டளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் டிஆர்ஓக்கள் சரவணன், கண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் மல்லிகா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஷ்வரி, வேளாண்மை துணை இயக்குனர். கவுதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




